சமஷ்டி உள்ளடங்காதவாறு அரசியலமைப்பில் திருத்தம் : தமிழர்களுக்கு இதன் ஊடாக தீர்வு – ஆளும் கட்சி அறிவிப்பு
சமஷ்டியாட்சியின் கொள்கைகளை உள்ளடக்காத வகையிலும், எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு அரசியல் நோக்கங்களை பின்னணியாக கொண்டிராத வகையில் வழங்கப்படும்.
பொருளாதாரத்தை மேம்படுத்தினால் இனங்களுக்கிடையில் எவ்வித முரண்பாடும் தோற்றம் பெறாது என்பதே அரசாங்கத்தின் கொள்கை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். ல்க்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்தால் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பினை தீர்மானிக்கும் ஒரு பலமான சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி பதவி வகித்தது.
எதிர்கட்சி பதவியில் இருந்துக் கொண்டு கூட்டமைப்பினர் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
நாட்டை பிளவுபடுத்தும் வகையில் சமஷ்டியாட்சியின் கொள்கைகளை உள்ளடக்கிய அரசியலமைப்பினை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தினார்கள். மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி கட்சியாகவும் செயற்பட்டார்கள்.
பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்க பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்தரப்பினராக செயற்பட்ட நாங்கள் ஒருபோதும் தடைகளை ஏற்படுத்தவில்லை. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கே கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம்.
தமிழ் , முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் அது அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். அரசியலமைப்பில் திருத்தம் ஊடாகதான தீர்வு காண முடியும் என்பது பொறுத்தமற்றது.
அரசியலமைப்பின் ஊடாக ஒரு தரப்பினருக்கு தீர்வு வழங்கும் போது பிறிதொரு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். இதனை கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றப்பட வேண்டும். பொருளாதார சமத்துவம் காணப்படும் போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறாது. சமஸ்டியாட்சியின் கொள்கைகளை உள்ளடக்காத விதத்தில் நிச்சயம் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்றார்.
