தோட்டத்தொழிலாளர்களின் 1000ரூபா சம்பளத்தினை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட இ.தொ.கா. தீர்மானம்.ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளத்தினை வலியுறுத்தி எதிர்வரும் 05 ம் திகதி அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினை செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்
இன்று 31ஆம் திகதி மாலை கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதான அலுவலகத்தில் (சி.எல்.எப்) இல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நேற்று முன்தினம் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது அந்தப் பேச்சுவார்த்தையில் அவர்கள் 725 அடிப்படை சம்பளத்துடன் ஏனைய கொடுப்பனவுகளை கூட்டி ஆயிரம் ரூபா தருவதாகவே தெரிவித்தார்கள் ஆனால் நாங்கள் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம.; அவர்கள் அதற்கு இணங்கவில்லை. எனவே தொழிலாளர்கள் அனைவரும் இந்த விடயத்தில் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். என்பதனை கம்பெனிகளுக்கு உணர்த்த வேண்டும். என்பதற்காகவே நாங்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் இது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் அல்ல இது கம்பெனிகளுக்கு கொடுக்கும் ஒரு அழுத்தமே ஆகவே இந்த போராட்டத்திற்கு தொழிலாளர்கள் மாத்திரமன்றி தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்ட அனைத்து துறையினரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்
இது குறித்து அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கம்பனிகள் எம்மிடம் ஒரு கோரிக்கை விடுத்தார்கள் நாங்கள் ஆயிரம் ரூபா சம்பளம் தருகிறோம் ஆனால் கூட்டு ஒப்பந்தம் நான்கு வருடத்திற்கு ஒரு முறை கைச்சாத்திட வேண்டும் ஒவ்வொரு தோட்டத்திலும் இரண்டு கிலோ தேயிலை அதிகமாக பறிக்க வேண்டும் குறைந்த பட்சம் ஒவ்வொரு தோட்டத்திலும் 16 கிலோ தேயிலை கட்டாயம் பறிக்க வேண்டும் இதனை நாங்கள் நிராகரித்தோம் கூட்டு ஒப்பந்தத்தில் அனைத்து தொழிற் சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
அதே நேரம் தற்போது கொரோனாவால் மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதனால் நாங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதில்லை.அதனால் நாங்கள் இன்று எங்கள் மாவட்டத் தலைவர்களை அழைத்து ஒரு முடிவெடுத்துள்ளோம் ஒரு அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினை செய்து கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்கு தோட்டத்தில் வேலை செய்யும் மக்கள் மாத்திரமல்லாது அனைத்து மக்களும் கட்சி தொழிற்சங்க பேதமில்லாமல் அனைவரும் ஒரு வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக நிறைய பேர் பேசியிருக்கிறார்கள் இன்று அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். ஆகவே அனைத்து துறைச்சார்ந்தவர்களும் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்க ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே நேரம் அவர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
நஸ்ட்டத்தில் இயங்கும் தோட்டங்களை அரசாங்கம் பெற்று தற்போது இந்தியாவில் தற்போது சர்ச்சைக்குரிய அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது ஆனால் இதில் எவ்வித உண்மையும் கிடையாது இது ஒரு அரசியலுக்காக பேசப்படும் ஒரு விடயமே இன்று கிழக்கு முனை இந்தியாவுக்கு கொடுப்பது தொடர்பாக இதனையும் கோர்த்து சொல்கிறார்களே தவிர இதில் எவ்வித உண்மையும் கிடையாது. இதில் இந்தியாவுடன் இருக்கும் உறவினை கெடுக்கவே அனைவரும் முயற்சி செய்கிறார்கள்.
அதே நேரம் எதிர்வரும் ஆறாம் திகதி சம்பள நிர்ணய சபை கூடுகிறது ஆகவே தான் நாங்கள் இந்த திகதியினை குறிப்பிட்டுள்ளோம் இதில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கெடுக்கிறது ஆகவே அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் அல்ல இது முழுக்க முழுக்க கம்பனிகளுக்கெதிரான போராட்டம் இன்று பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும் தொழிலாளர் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்பதனை கம்பனிகள் உணரச்செய்வதற்கே இந்த போராட்டம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ்,பிலிப்குமார். ஆகியோர் கலந்து கொண்டனர்.
