ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 128 வது வருடத்தில் 129 பேர் பல்கலைகழகத்திற்கு தெரிவு.தேசிய மட்டத்திலும் முதலிடம்
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 128 வது வருடத்தில் கடந்த 2019ம் வருடம் க.பொ.த. உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 129 பேர் நாட்டிலுள்ள 17 பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இம் முறை பௌதீக விஞ்ஞான பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் ஹைலன்ஸ் மத்திய கல்லூரிக்கு கிடைத்துள்ளதாகவும் அக்கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

தேசிய பல்கலைகழக மானியங்களின் ஆணைக்குழு நேற்று முன்தினம் க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் வெட்டுப்புள்ளிகளைப் வெளியிட்டிருந்தது அதன் அடிப்படையில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக் கல்லூரியில் கடந்த வருடம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 21 பேர் மூன்று பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளதாகவும், அதில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 43 பேரும் பௌதீக விஞ்ஞானப்பிரிவில் 31 பேரும், கலைத்துறையில் 28 பேரும், வர்த்தக துறையில் 17 பேரும், தொழிநுட்பத்துறையில் எட்டு பேருமாக மொத்தம் 129 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பிரிவுகளிலிருந்து 40 கற்கை நெறிகளுக்கு கொழும்பு பல்கலைகழகத்திற்கு 02 பேரும், பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கு 08 பேரும், ஸ்ரீஜயவர்தனபுர 05 பேரும். களனிய மூன்று பேரும், மொரட்டுவ 13 பேரும், யாழ்ப்பாணம் 29 பேரும், ரூஹூன 07 பேரும், கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 10 பேரும், ரஜரட்ட 05 பேரும். சப்பிரகமுவ பல்கலைக்கழகத்திற்கு 06 பேரும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 07 பேரும் வயம்ப 08 பேரும் ஊவா வெல்லஸ்ஸ 08 பேரும், திருகோணமலை 02 பேரும், வவுனியா 01, விபுலாநந்த 03 பேரும், ரத்மலான 11 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
இக்கல்லூரியிருந்து 10 வருடங்களுக்கு பின் இரண்டு மாணவர்கள் சட்டத்துறைக்கு தெரிவாகியுள்ளதுடன் 42 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுள்ளனர்.
இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்காக உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி சமூகங்கள் அனைவருக்கு நன்றி கூறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
