வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு இன்று முதல் ஆலோசனை வழங்கும் வகுப்பு
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் உள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் வீதி ஒழுங்கை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த சட்டம் இன்று முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதனை மீறும் ஓட்டுனர்களுக்கு எதிராக எந்தவொரு தண்டப்பணமோ நீதிமன்ற நடிவடிக்கைகளோ முன்னெடுக்கப்பட மாட்டாது என போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வீதி ஒழுங்கை சட்டத்தை மீறும் ஓட்டுனர்களுக்கு தௌிவூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை எதிர்வரும் நாட்களிலும் தொடரவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தை போலல்லாது வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகள் ட்ரோன் கமெரா மற்றும் CCTV கமெரா மூலம் வாகன போக்குவரத்து கண்காணிக்கப்படுவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க குறிப்பிட்டுள்ளார்.
விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு குறித்த பகுதியில் வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் குறித்த வாகனத்தை பதிவு செய்த உரிமையாளரை அடையாளங்கண்டு விபரங்கள் திரட்டப்படவுள்ளன.
அவ்வாறு திரட்டப்படும் விலாசங்களுக்கு, வீதி நடைமுறைகளை பின்பற்றுவதற்கான ஆலோசனை வகுப்புகளில் பங்கேற்குமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்படவுள்ளது.
தவறிழைத்த சாரதிகள், குறித்த வகுப்புகளுக்கு சமூகமளிப்பது கட்டாயமானது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க தெரிவித்துள்ளார்.
காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 முதல் 8 மணி வரையிலும் ஹைலெவல் வீதி, கண்டி வீதி, காலி வீதி மற்றும் ஶ்ரீஜயவர்தன புர வீதி ஆகியவற்றில் இவ்வாறு வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
