ராகலை கடைத்தொகுதியில் திடீர் தீ மூன்று கடைகள் முற்றாக சேதம்.(வீடியோ இணைப்பு)
நுவரெலியா இராகலை கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீக்காரணமாக மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளன.
நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை பிரதான நகரில் இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள கடைத் தொகுதிகளில் இன்று (19) அதிகாலை 1 மணி அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சில்லறை கடை, கோழி கடை மற்றும் கையடக்க தொலைபேசி வறிபனை நிலையம் ஆகிய 3 கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராகலை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த தீ ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிவதற்கும் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
