போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டாளர் ஒருவர் இரத்தினபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பிராந்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 04 கிராம் 590 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கையடக்கத் தொலைபேசியூடாக நிதி பரிமாற்றி, சந்தேகநபரால் போதைப்பொருள் விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பணத்தைப் பெற்று பல்வேறு இடங்களில் போதைப்பொருள் விற்பனையில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிறிது காலம் சிறைச்சாலைகள் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை நாளை (16) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி, தடுப்புக்காவல் விசாரணைக்கு அனுமதியைப் பெற எதிர்பார்ப்பதாக பொலிஸார் கூறினர்.
