தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னரே புதிய அமைச்சரவை பதவியேற்பு; சட்டத்தரணி சாகர காரியவசம்
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புதிய அமைச்சரவையின் பதவியேற்பை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அடுத்த ஏழு நாட்களுக்குள் வழங்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன், அதன் பெயர் பட்டியல் நேற்று (07) மாலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்டுவிட்டது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப்பட்டியல் ஆசனங்களும், தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எமது மக்கள் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலா ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.
மேற்கூறிய கட்சிகள் அனைத்தும் ஆணைக்குழுவிடம் தனது தேசியப் பட்டியல்,பாராளுமன்ற உறுப்பினர் பெயர் பட்டியலை கையளிக்கப்படவில்லை.
இதனிடையே, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கவுள்ளார்.
நாளை காலை 8.30 அளவில் களனி ரஜமஹா விகாரையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
