http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஈரான் தளபதி சுலைமானியை கொன்றது சட்டவிரோதம்: அமெரிக்காவுக்கு ஐ.நா., கண்டனம்

கடந்த ஜனவரி மாதம் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவால் விமான தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான காசெம் சுலைமானி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். சுலைமானி கொலை தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 35 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள ஈரான், கடந்த வாரம் அவர்களுக்கு கைது வாரண்டும் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், சர்வதே சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் குறித்த ஐ.நா.,வின் சிறப்பு அறிக்கையாளரான ஏக்னஸ் கேலமார்ட், தனது அறிக்கையை இன்று (9ம் தேதி) ஐ.நா.,வின் மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பித்தார்.

அதில், தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த சுலைமானி திட்டமிட்டார் என்பதற்கான எந்த ஆதாரத்தை அமெரிக்கா அளிக்கவில்லை. ஈரான் ராணுவத்தின் ராஜதந்திரங்களுக்கு தலைமை தாங்கியவரான சுலைமானி, சிரியா மற்றும் ஈராக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்தார். அவரால் மற்றவர்கள் உயிர்களுக்கு ஆபத்து என்ற நிலை இல்லாத நிலையில், இதுபோன்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தியது சட்டத்துக்குப் புறம்பானது.

எனவே இந்த டுரோன் தாக்குதலானது ‘தன்னிச்சையாக நடத்தப்பட்ட கொலை’ என்பதால், சர்வதேச மனித உரிமை சட்டப்படி இதற்கு அமெரிக்காதான் பொறுப்பு. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களும் சட்டத்துக்கு எதிரானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் உள்துறை செய்தித்தொடர்பாளர் மார்கன் ஒர்டகஸ், ‘ஈரான் ஜெனரல் சுலைமானி உலகின் மோசமான பயங்கரவாதி என்ற அவரது கடந்த காலத்தை மறந்துவிட்டு, இவ்வாறு அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை எழுதியது நேர்மையின்மையை காட்டுகிறது. இது பயங்கராவதிகளுக்கு ஆதரவளிக்கும் அறிக்கை’ எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *