கத்தோலிக்க செபமாலை
கத்தோலிக்க செபமாலை என்பது கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். செபமாலை அருட்கருவியில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன.

கத்தோலிக்க செபமாலை என்பது கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். பாரம்பரியப்படி செபமாலையில் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களின் 15 மறையுண்மைகளை தியானிக்கும் வழக்கம் இருந்தது. இதன் அடிப்படையிலேயே திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் இந்த செப முயற்சியை அதிகாரப்பூர்வமானதாக அறிவித்தார். 2002ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ஒளியின் மறைபொருள்கள் என்னும் பெயரில் இயேசுவின் பணி வாழ்வை சிந்திக்கும் 5 புதிய மறையுண்மைகளை சேர்த்தார்.
செபமாலை அருட்கருவியில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன. செபமாலையின் ஆங்கிலச் சொல்லான ரோசரி (rosary) என்பது ரோசா பூக்களினால் உருவான மாலையைக் குறிக்கிறது .
ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களின் பக்தி முயற்சியாக ஒவ்வொருநாளும் 150 தடவை “இயேசு கற்பித்த இறைவேண்டலாகிய” பரலோக மந்திரத்தை (Our Father) சொன்னார்கள். பிற்பட்ட காலங்களில் 150 அருள் நிறை மரியே (Hail Mary) என்ற செபத்தைச் சொன்னார்கள். இன்னும் மத்திய காலப் பகுதியில், தாம் சொல்லுகின்ற 150 செபத்தை எண்ணுவதற்காக நூலில் பொருத்தப்பட்ட மணிகளைப் பாவித்தார்கள்.
இன்று பாவிக்கின்ற செபமாலையானது டொமினிக்கன் செபமாலையை அடிப்படையாகக் கொண்டது.
13ம் நூற்றாண்டில், புனித தொமினிக்குவிற்கு மரியாள் காட்சி கொடுத்தது இப்பக்தியை பரப்பச் சொன்னதாக நம்பப்படுகின்றது. 1475ஆம் ஆண்டில் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த அலன் தெ லா ரோச் (Alain de la Roche) என்பவரும் அவருடன் உடன் உழைத்தவர்களும், பிரான்சின் வடபகுதியில் இதைப் பரப்பினார்கள். அதன்பின் ஜரோப்பிய நாடுகளிலும் இது பரவியது. திருத்தந்தை பத்தாம் லியோ, 1520 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை செபமாலையின் மாதமாக அறிவித்தார்
