ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுப்பதே எமது முதல் நோக்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச்செயலாளரும் வேட்பாளருமான எம்.ராமேஸ்வரன் தெரிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பளம் தொடர்பாக 25.6.2020 நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. எனவே அடுத்தகட்ட பேச்சவார்த்தையின்போது இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று அலரிமாளிகையில் (25.6.2020) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. பெருந்தோட்டதுறையின் முக்கியஸ்தர்கள், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன,இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1000 ரூபாயை வழங்குவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டதாகவும் இது தொடர்பான இறுதிக்கட்ட தீர்மானம் பிரதமருடனான அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையின்போது தெரியவரும். அத்துடன் 1000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்ககொடுப்பதே எங்களின் நோக்கமாகும். எனினும் அதற்கு அரசாங்கம் மானியம் வழங்க முன்வரவேண்டும் என கம்பனி சார்பில் கோரப்பட்டது. அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
தலவாக்கலை பி.கேதீஸ்
