http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சட்டவிரோதமாக ஆற்றுவாயை வெட்டி ஆற்று நீரை கடலுக்கு செலுத்த முற்பட்ட அம்பாறை ஆளும் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 33 பேர் கைது

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று நீரை சட்டவிரோதமாக கடலுக்கு ஆற்றுவாயை வெட்டிய ஆளும் கட்சி அம்பாறை வேட்பாளர் ஒருவர் உட்பட 33 பேரை கைது செய்ததுடன்  3 வாகனங்கள் மற்றும் மண்வெட்டிகளை மீட்டுள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு (07) இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அம்பாறை கரைவாகுபற்று பகுதி  வேளாண்மை வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

இதனையடுத்து மூடப்பட்டுள்ள மட்டக்களப்பு முகத்துவார ஆற்று வாயை வெட்டி கடலுக்கு நீரை செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்

இந்த நிலையில் திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீ லங்கா பெரமுனை கட்சியின் 2 ஆம் இலக்க வேட்பாளர் கீர்த்தி ஸ்ரீ விஜயசிங்க தலைமையிலான குழுவினர் 4 வாகனங்களில் அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதிக்கு சென்று  சம்பவதினமான நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சட்டவிரோதமாக ஆற்றுவாயை வெட்டி ஆற்று நீரை கடலுக்கு செலுத்த முற்பட்டனர்.

இதன்போது அப்பகுதி மீனவர்கள் பொதுமக்கள்  உடனடியாக ஆற்றுவாயை வெட்டவிடாது தடுத்ததுடன் மட்டு மாநரசபை மேயர், ரி.சரவணபவான் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைத்து சட்விரோதமாக ஆற்றுவாயை வெட்ட முற்பட்டவர்களை மடக்கிபிடித்தது இராணுவத்தினர், பொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த முகத்துவாரம் வெட்டுவதானால் கமநலசேவைகள், மற்றும் நீர்ப்பாசன சேவைகள் திணைக்களம், அரசாங்க அதிபர் ஆகியோரின் அனுமதியுடன் அதனை வெட்டவேண்டும். இருந்தபோதும் அதனையும் மீறி மூடப்பட்டுள்ள மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாயை சட்டவிரோதமாக வெட்டினால் மட்டக்களப்பு ஆற்றிலுள்ள மீன்கள் இல்லாமல் போகும் மற்றும்  கிணறுகளில் நீர் இல்லாமல் போகும், போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே இந்த ஆற்றுவாயை வெட்டமுடியாது. அதேவேளை அம்பாறை மாவட்டதிலுள்ள அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம்,  தம்பட்டை முகத்துவாரம், ஒலுவில் முகத்துவாரம் போன்றவற்றின் ஆற்றுவாயை வெட்டமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபை மேயர் ரி.சரவணபவன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *