இலங்கையின் முதலாவது தாதியர் பல்கலைக்கழகம் விரைவில் ஆரம்பம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், பேராசிரியர் ஜனிதா லியனகே, இலங்கையின் முதலாவது தாதியர் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டிலிருந்து பட்டப்படிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக கூறினார்.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள அறிக்கையில்,
நாட்டிலுள்ள 17 தாதியர் கல்லூரிகளை ஒன்றிணைத்து தாதியர் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், தாதியர்களுக்கான பட்டப்படிப்பிற்குரிய கல்வி திட்டங்களை வகுக்கும் பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாதியர் பல்கலைக்கழகத்தினூடாக வருடமொன்றுக்கு 3,000 பட்டதாரி தாதியர்களை உருவாக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளருடன் பல்கலைக்கழக மானியங்கள் இணைந்து புதிய பல்கலைக்கழகத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், பேராசிரியர் ஜனிதா லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.
