புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் யார் ?
ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் யார் என்பது தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது.
இதற்காக குறிப்பிடப்படும் பெயர்களில், மஹிந்த யாப்பாவின் பெயரும் முக்கிய இடம்பெறுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மஹிந்த யாப்பா இவ்வாறான பதிலை வழங்கினார்,
சபாநாயகர் பதவி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் உச்சபட்சம் செயற்பட முடியும்
புதிய பாராளுமன்றத்தின் முக்கிய நடவடிக்கை என்ன என்பது குறித்தும் தற்போது பேசப்பட்டு வருகின்றது.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மறுசீரமைத்து 20 ஆவது திருத்தத்தை விரைவில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திய 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கடந்த காலத்தில் பொதுஜன பெரமுன மற்றும் கூட்டுக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுத்தல், ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள், பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் விடயம் என்பன குறித்தும் விமர்சிக்கப்பட்டது.
அந்தக் குறைபாடுகளை நீக்கி, இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தை மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக இதுகுறித்து வினவியபோது நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
அதற்கான வரைபைத் தயாரித்து வருவதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
