அமைச்சர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை மீண்டும் ஜனாதிபதிக்கு கையளிக்கவேண்டும்
இதுவரை தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்காத வேட்பாளர்களின் பெயர் பட்டியலை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
தங்கள் சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்பட்டியலை பெற்றுக்கொள்வதற்காக, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்திருக்கின்றோம். அதற்கான பதில் கிடைத்ததும் அதுதொடர்பான முறைப்பாட்டை லஞ்ச ஊழல் ஆணைக்ழுவில் தெரிவித்து பெயர் பட்டியலை வழங்குவோம். பின்னர் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும்.
அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னர் தங்களின் சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவேண்டும்.
அதேபோன்று அமைச்சர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை மீண்டும் ஜனாதிபதிக்கு கையளிக்கவேண்டும் என்றார்.
