30 வருட யுத்தத்தினை இல்லாது செய்து நாட்டில் நடமாடும் உரிமையினை நாமே ஏற்படுத்தியுள்ளோம். நுவரெலியா ராகல பகுதியில் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிப்பு.(வீடியோ இணைப்பு)
நாட்டில் கடந்த 30 வருடங்களாக யுத்தம் நிலவியது இதனால் மக்கள் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாத நிலையே காணப்பட்டது. பொலிஸாரின் சோதனை நடவடிக்கை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தார்கள் அவ்வான நேரத்தில் நாங்கள் அரசாங்கத்தினை பொறுபேற்று யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்து இந்த நாட்டில் அனைவரும் சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலையை ஏற்படுத்தினோம். அதனை தொடர்ந்து அதிவேக பாதைகள், துறைமுகம், விமான நிலையம் என பல பாரிய அபிவிருத்திட்டங்களை முன்னெடுத்தோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
பொது ஜன பெரமுன நுவரெலியா வேட்பாளர் சி.பி.ரத்நாயக்க அவர்கள் ஒழுங்கு செய்திருந்த தேர்தல் பிரசார கூட்டம் இன்று (26) ராகலை பகுதியில் நடைபெற்றது. பொது ஜன பெரமுன வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று இளைஞர் மாத்திரமன்றி ஐக்கிய தேசிய கட்சியினை சேர்ந்த பலர் அணி அணியாக வந்து எம்முடன் இணைந்து வருகிறார்கள். எங்களுடைய கூட்டங்களுக்கும் வருகை தருகிறார்கள். “அப்போது நான் அவர்களிடம் கேட்டேன் நீங்கள் ஏன் எங்களுடன் இணைகிறீர்கள் என்று வினவியபோது, ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது அதில் ரணில் ஒரு பக்கமும் சஜித் ஒரு பக்கமும் நின்று சிறிகொத்தாவை பிடிப்பதற்கு போட்டியிடுகின்றனர். நாட்டை பிடிப்பதற்கு போட்டியிடாது சிறிகொத்தாவினை பிடிப்பதற்கு போட்டியிடுவதற்கு நாம் ஏன் அவர்களுடன் செல்ல வேண்டும் எனவே இன்று நீங்கள் இந்த நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதனால் நாங்கள் உங்களுடன் வந்தோம் என்றார்கள்.
இதுதான் உண்மை ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் 69 லட்சத்தினால் வெற்றி பெற்றோம். ஆகவே நீங்கள் அங்கீகரித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு நாங்கள் இன்று நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தின் அதிகாரம் ஜனாதிபதி உள்ள பக்கம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடந்த காலங்களில் உங்களுக்கு தெரியும் நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கரசிங்க அவர்களுக்கும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஜனாதிபதி சொல்வதை பிரதமர் செய்வதில்லை. பிரதமர் சொல்வதை ஜனாதிபதி செய்வதில்லை. இதனால் யாருக்கும் நட்டம்? பொது மக்களுக்கு தான் நட்டம் ஏற்பட்டது. கடந்த ஐந்து வருடகாலங்களில் அவர்கள் எதனையும் செய்வில்லை. அபிவிருத்தியினை எங்களிடமே எதிர்பார்க்க வேண்டும்.

நாங்கள் 2005ம் ஆண்டு ஆட்சிக்கு வந்து பயங்கரவாதத்தினை தோற்கடித்து மக்களுக்கு சென்று வருவதற்கான உரிமையினை ஏற்படுத்தி கொடுத்தோம். இன்று நீங்கள் தெற்குக்கும் போகலாம் வடக்குக்கும் போகலாம்.வீட்டில் நிம்மதியாக வாழும் உரிமையினை ஏற்படுத்தியுள்ளோம். பயம் அச்சமின்றி வாழக்கூடிய சூழலினை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இரவு வேளைகளில் பொலிஸார், இராணுவம் வந்து சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் தான் எமது அரசாங்கம். யுத்தத்தினை இரண்டரை வருடம் செய்து மீதி இரண்டரை வருடத்தில் பாதைகளை சீர் அமைத்தோம்,மஹிந்தோதய கணணி விஞ்ஞான கூடங்களை நாடு முழுவதும் உருவாக்கினோம்.
இதனால் விஞ்ஞானம் ஆங்கிலம் கணிதம் போன்ற துறைகள் வளர்ச்சிப் பெற்றன. இவை அனைத்துமே கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் நிறுவப்பட்டன. ஆகவே நாங்கள் முன்னெத்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். கடந்த காலத்தில் நாங்கள் உருவாக்கிய துறைமுகத்தை வெளிநாட்டுக்கு விற்பனை செய்தார்கள்.
எமது நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தார்கள். இந்த நாட்டின் சொத்துக்களை அவ்வாறு செய்ய இடமளிக்க முடியாது. அது சிங்களமாக இருக்கட்டும் தமிழாக இருக்கட்டும்,முஸ்லிமாக இருக்கட்டும். இது இந்த நாட்டு மக்களின் சொத்து. பிறக்க இருக்கும் குழந்தைகளின் சொத்து. ஆகவே இந்த நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் எண்ணமில்லாத கட்சிக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிப்பதன் மூலம் தான் இந்த நாட்டின் எதிர்காலம் சுபீட்சமிக்க எதிர்காலமாக மாறும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
