அதிவிஷேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்
சுகாதார வழிமுறைகளை உள்ளடக்கிய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது
தேர்தல் காலப்பகுதியின் போது பிரசார கூட்டமொன்று ஆரம்பமாவதற்கு 24 மணித்தியாலயங்களுக்கு முன்னர் அது பற்றி எழுத்து மூலமான அறிவித்தலை சுகாதார மருத்துவ அதிகாரிக்கு வழங்க வேண்டும்
தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்வோரது எண்ணிக்கை 300 ஐ விட அதிகரிக்கப்படாமலிருக்க வேண்டும்.
அரசியல் கட்சியின் தலைவர் அல்லது சுயாதீன குழுவின் தலைவர் கலந்து கொள்வாராயின் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 500 ஐ விட அதிகரிக்கக் கூடாது
கூட்டத்தில் கலந்து கொள்பவர்களது பெயர் , அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு விபரங்கள் பதிவு செய்யப்படுதல் அத்தியாவசியமாகும். மேலும் அவர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்க வேண்டும். குறிப்பாக ஒரு மீட்டர் இடைவெளியும், முககவசமும் அணிந்து இருக்க வேண்டும். ஒலிபெருக்கி சாதனங்கள் பாவித்த பின்னர் தொற்று நீக்கப்பட வேண்டும் .
ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று துண்டுப்பிரசுரங்களை அல்லது கையேடுகளை கொடுக்க செல்லும்பொழுது வெறும் ஐந்து நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். மேலும் இவர்கள் மேற்கூறிய அனைத்து சுகாதார முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் அலுவலகத்திற்கு அல்லது அதனை அண்மித்த பகுதிகளுக்குச் செல்லும் போது கைகளை சுத்தமாக கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருத்தல் அவசியமாகும். அத்தோடு சமூக இடைவெளியைப் பேணுதல் , முகக்கவசம் அணிந்திருத்தல் என்பனவும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அலுவலகங்களில் மதுபானம் உட்கொள்ளப்படாதிருப்பதற்கும் அலுவலக வளாகத்தினுள் விளையாட்டுக்கள் எவற்றையும் விளையாடாதிருப்பதனை வேட்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
வாக்கெடுப்பு நிலையத்திலும் அதன் வளைவுகளிலும், வாக்கெண்ணும் நிலையங்களிலும் அதன் வளைவுகளிலும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திலும் அதன் வளைவுகளிலும் உள்ள ஒவ்வொருவரும் அவற்றினுள் பிரவேசிப்பதற்கு முன்னர் கைகளை சவர்காரத்தினால் அல்லது கிருமி நீக்கியினால் சுத்தமாக்க கழுவ வேண்டும்.
நபர்களுக்கிடையே ஒரு மீற்றருக்கு குறையாத சமூக இடைவெளி பேணப்பட வேண்டும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிய வேண்டும்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அதன் பெறுபேறு வெளியிடப்படுகின்ற திகதிவரை செல்லுபடியுடையதாகும்.
