சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்கள் கட்டாயம் சிந்திக்க வேண்டிய தருணம் இது
14 நாட்களின் பின் பி.சிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டாலும் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் இவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதலில் இருந்தபொழுது உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றியது போல் பின் சுய தனிமைப்படுத்தும் காலத்திலும் குடும்பத்துடனும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டியது அவர்களுக்கு கட்டாய சமூக பொறுப்பாகும்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்திய சம்பவம்.
இந்தியாவிலிருந்து வருகை தந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்திருந்த, கப்பலில் பணியாற்றியிருந்த மாலுமி ஒருவருக்கே கொரோனா தொற்று இருப்பதுகண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
14 நாட்களின் பின், பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. இவர் வீட்டில் மேலும் 14 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
தகவல் அறிந்து அதிரடியாக செயற்பட்ட அரசாங்கம் கொழும்பு , ஜிந்துப்பிட்டி வீதியை தற்காலிகமாக மூடியது. எனினும், இது சமூக பரவல் அல்லவென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆனாலும் அந்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் பழகிய மேலும் சிலரை கண்டறிய சுகாதார பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் தொற்றுக்குள்ளான நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு நோய்த் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
